திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.79 திருக்கோகரணம் - திருவிராகம் பண் - சாதாரி |
என்றுமரி யானயல வர்க்கியலி சைப்பொருள்க ளாகியெனதுள்
நன்றுமொளி யானொளிசி றந்தபொன்மு டிக்கடவுள் நண்ணுமிடமாம்
ஒன்றிய மனத்தடியர் கூடியிமை யோர்பரவும் நீடரவமார்
குன்றுகள் நெருங்கிவிரி தண்டலை மிடைந்துவளர் கோகரணமே.
|
1 |
பேதைமட மங்கையொரு பங்கிட மிகுத்திடப மேறியமரர்
வாதைபட வண்கடலெ ழுந்தவிட முண்டசிவன் வாழுமிடமாம்
மாதரொடும் ஆடவர்கள் வந்தடியி றைஞ்சிநிறை மாமலர்கள்தூய்க்
கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் கின்றவளர் கோகரணமே.
|
2 |
முறைத்திறம் உறப்பொருள் தெரிந்துமுனி வர்க்கருளி யாலநிழல்வாய்
மறைத்திறம றத்தொகுதி கண்டுசம யங்களைவ குத்தவனிடந்
துறைத்துறை மிகுத்தருவி தூமலர் சுமந்துவரை யுந்திமதகைக்
குறைத்தறையி டக்கரி புரிந்திடறு சாரல்மலி கோகரணமே.
|
3 |
இலைத்தலை மிகுத்தபடை யெண்கரம் விளங்கஎரி வீசிமுடிமேல்
அலைத்தலை தொகுத்தபுனல் செஞ்சடையில் வைத்தஅழ கன்றனிடமாம்
மலைத்தலை வகுத்தமுழை தோறும்உழை வாளரிகள் கேழல்களிறு
கொலைத்தலை மடப்பிடிகள் கூடிவிளை யாடிநிகழ் கோகரணமே.
|
4 |
தொடைத்தலை மலைத்திகழி துன்னிய எருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சிய தபோதனன் எமாதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடித்துமற வாளரொடு வேடர்கள் பயின்றுகுழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி தீரநல்கு கோகரணமே.
|
5 |
நீறுதிரு மேனிமிசை யாடிநிறை வார்கழல்சி லம்பொலிசெய
ஏறவிளை யாடவிசை கொண்டிடு பலிக்குவரும் ஈசனிடமாம்
ஆறுசம யங்களும் விரும்பியடி பேணியரன் ஆகமமிகக்
கூறுவனம் வேறிரதி வந்தடியர் கம்பம்வரு கோகரணமே.
|
6 |
கல்லவடம் மொந்தைகுழல் தாளமலி கொக்கரைய ரக்கரைமிசை
பல்லபட நாகம்விரி கோவணவர் ஆளநகர் என்பரயலே
நல்லமட மாதரரன் நாமமும் நவிற்றிய திருத்தமுழுகக்
கொல்லவிட நோயகல்த ரப்புகல்கொ டுத்தருளு கோகரணமே.
|
7 |
வரைத்தலம் நெருக்கிய முருட்டிருள் நிறத்தவன வாய்கள்அலற
விரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெரு மானினிது மேவுமிடமாம்
புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலி வாகிவினை தீரஅதன்மேல்
குரைத்தலை கழற்பணிய ஓமம்வில கும்புகைசெய் கோகரணமே.
|
8 |
வில்லிமையி னால்விறல ரக்கனுயிர் செற்றவனும் வேதமுதலோன்
இல்லையுள தென்றிகலி நேடஎரி யாகியுயர் கின்றபரனூர்
எல்லையில் வரைத்தகடல் வட்டமும் இறைஞ்சிநிறை வாசமுருவக்
கொல்லையில் இருங்குறவர் தம்மயில் புலர்த்திவளர் கோகரணமே.
|
9 |
நேசமில் மனச்சமணர் தேரர்கள்நி ரந்தமொழி பொய்கள்அகல்வித்
தாசைகொள் மனத்தையடி யாரவர் தமக்கருளும் அங்கணனிடம்
பாசமத றுத்தவனி யிற்பெயர்கள் பத்துடைய மன்னன்அவனைக்
கூசவகை கண்டுவின் அவற்கருள்கள் நல்கவல கோகரணமே.
|
10 |
கோடலர வீனும்விரி சாரல்முன் நெருங்கிவளர் கோகரணமே
ஈடமினி தாகவுறை வானடிகள் பேணியணி காழிநகரான்
நாடிய தமிழ்க்கிளவி யின்னிசைசெய் ஞானசம் பந்தன்மொழிகள்
பாடவல பத்தரவர் எத்திசையும் ஆள்வர்பர லோகமெளிதே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |